பாட்னா: நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தெருவில் இறங்கிப் போராடிய சம்பவம் நிகழந்துள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடுமுழுவதும் வியாழனன்று ஆசிரியர்கள் தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிகார் மாநிலத்தில் ஆசிரியர்கள் தினத்தன்று ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் தெருவில் இறங்கிப் போராடிய சம்பவம் நிகழந்துள்ளது.
பிகார் மாநிலம் முழுவதும் நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இணையாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஊதியம் மற்றும் இதர வசதிகளில்பெரும் வேறுபாடு உள்ளது. இதனைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் வியாழன்று ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடந்துள்ளது. பாட்னாவின் கர்தானிபாஹ் பகுதியை அடைந்த அவர்கள் அங்கிருந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக கோஷமிட்டு பேரணி நடத்தியுள்ளனர்.
மாநிலத்தில் உள்ள ஆசியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விதமாக வியாழன்று நடைபெறும் விழாவில் பங்கேற்காத இவர்கள், விருதுகளைப் புறக்கணிக்குமாறு தேர்வான ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்
எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிமெடுப்பதில்லை என்று தெரிவித்த ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவரான மார்க்கண்டே பதக், கோரிக்கைகளநிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.