விளாடிவோஸ்டோக்: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது தமக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
மேடையின் மீது வெள்ளை நிற சேர்கள் இருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு அழகான சோஃபா கொண்டுவரப்பட்டது. ஆனால், தனக்கு மட்டும் அதுபோன்ற சோஃபா வேண்டாம் என்று கூறிவிட்ட மோடி, பிற அதிகாரிகள் அமர்ந்த அதே சேரில் தானும் அமர்வதாகக் கூறிவிட்டார்.
இந்த சம்பவம் விடியோவாக வெளியானது. அதனை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மோடியின் எளிமை மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் குணமும் ஏராளமானோரால் பாராட்டப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, ரஷியாவில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கிழக்குப் பொருளாதாரக் குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ரஷியாவிலுள்ள தொழிலதிபர்களை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளின் தொழில்முனைவோர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் வகையில், இணையதளம் ஒன்றை அவர் தொடக்கிவைத்தார். இந்த இணையதளம் இருநாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற இந்தியா-ரஷியா இடையிலான 20-ஆவது வருடாந்திர மாநாட்டில், இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில் விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாடு திரும்பினார்:
தனது இரண்டு நாள் ரஷிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, வியாழக்கிழமை இரவு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.