புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என்று மூத்த பெண் நீதிபதி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஆகஸ்ட் 28-ல் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், ரவீந்திர பட், வி.ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரே மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பானுமதி குற்றம்சாட்டியுள்ளார்.
சீனியாரிட்டி அடிப்படையில் இமாச்சல பிரதேசத்தின் தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் 42-வது இடத்தில் உள்ளதாகவும், அதே சமயம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சுதாகர் 3-வது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிபதிகளுக்கான தேர்வில் சுதாகருக்கான சீனியாரிட்டியை எப்படிப் புறக்கணிக்கலாம் என்றும் நீதிபதி பானுமதி கேள்விஎழுப்பியுள்ளார்.
நாட்டின் 6-வது மூத்த நீதிபதியான பானுமதி கொலிஜியம் குழுவில் இடம்பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் என்பதால், அதே நீதிமன்றத்தில் பணியாற்றிய ராமசுப்பிரமணியன் தேர்வு குறித்து இவரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அப்போது தனது அதிருப்தியை நீதிபதி பானுமதி வெளிப்படுத்தியுள்ளார்.