கவுஹாத்தி: ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமானது அசாமில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு ஆயுதப்படையினர் பணியமர்த்தப்படுகின்றனர். அப்போது அங்கு நிலவும் சூழலைச் சமாளிக்கும் பொருட்டு அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவானது உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சிறப்பு சட்டமானது ஆயுதப்படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
அதன்படி பொது அமைதியை பரமாரிக்கும் பொறுப்புடன், அதன்பொருட்டு எவரையும் கைது செய்யவும், எந்தப் பகுதியிலும் சோதனை நடத்தவும் ஆயுதப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அமலில் இருக்கும் இந்த சட்டமானது, 1990-ம் ஆண்டு முதல் அசாமில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டமானது அசாமில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அசாம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் ஒட்டுமொத்த மாநிலமும் பதட்டமான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.