பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: இஸ்ரோ உறுதி 

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதிபடத் தெரிவித்துள்ளது.
நிலவை நோக்கிப் பயணம் செய்யும் சந்திரயான் - 2 விண்கலம்.
நிலவை நோக்கிப் பயணம் செய்யும் சந்திரயான் - 2 விண்கலம்.

பெங்களூரு: பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

சனிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில் 1,471 கிலோ கிராம் எடை கொண்ட விக்ரம் லேண்டர் 30 கி.மீ. தொலைவில் ஒரு நொடிக்கு 1,680 மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வரை நிலைமை சரியாக இருந்தது. அதாவது, நிலவின் தரைப் பகுதியில் இருந்து வெறும் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சிறப்பாக செயல்பட்டு, திட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்ததாக பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியார்களிடம் கூறினார்.

அதன்பிறகுதான் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை தரைக்கட்டுப்பாட்டு மையம் இழந்ததாக அவர் முறைப்படி அறிவித்தார். அதாவது, விக்ரம் லேண்டரை தொடர்ந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், விக்ரம் தரையிறங்கும் முன்பு திடீரென அது திட்டமிட்ட பாதையில் இருந்து லேசாக விலகியதை உணர்ந்தனர். அதன்பிறகுதான் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. லட்சோப லட்சம் இந்தியர்களின் 'நிலா கனவு' முடிவிற்கு வந்தது.  அதையடுத்து கண்ணீர்  விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை, அங்கிருந்த பிரதமர் மோடி தேற்றினார்.

இருந்தபோதும் தங்கள் திட்டத்தில் 95% நிறைவேற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதுமிருந்து ஆறுதலும், பாராட்டும் மற்றும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ சனிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முந்தைய திட்டங்களை ஒப்பிடும்போது சந்திரயான்-2 திட்டத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி ஆர்பிட்டர் சுற்றிக்கொண்டு வருகிறது

ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரும் பயனுள்ளதாக அமையும்

சந்திரயான்-2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை வெற்றிகரமாக எட்டிவிட்டோம்

தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com