திருவனந்தபுரம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் இறுதி நேரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது.
விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இருந்தபோதும் தங்கள் திட்டத்தில் 95% நிறைவேற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதுமிருந்து ஆறுதலும், பாராட்டும் மற்றும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமையன்று கூறியுள்ளதாவது:
சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது
விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை
சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.