இந்தியா, அமெரிக்கா இடையேயான மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சி, வாஷிங்டனில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தில்லியில் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
யுத் அப்யாஸ்-2019 என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் இடையேயான கூட்டுப் பயிற்சி, வாஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்கார்டு படைத் தளத்தில் செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் பயிற்சி, வரும் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெறவுள்ள மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியாக இது இருக்கும். இந்தப் பயிற்சியால், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றார் அவர்.
வாஷிங்டனில் தற்போது நடைபெற்று வரும் கூட்டு ராணுவப் பயிற்சி, 15-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவப் பயிற்சி, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது.