ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தில்லி
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரது மகனும் சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது; இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, குற்றப்பத்திரிகை மீதான வாதங்களுக்காக, வழக்கு விசாரணை வெள்ளக்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த விவகாரம் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பில் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறப்பு அரசு வழக்குரைஞர் நிதேஷ் ராணா ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் வெளிநாடுகளிலிருந்து ஆதாரங்களை திரட்டுவதற்காக, வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு இன்னும் பதில் பெறப்படவில்லை; எனவே, வழக்கு விசாரணையை அக்டோபர் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து, நீதிபதி கூறுகையில், இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் அடிக்கடி கோரப்படுகிறது. எனவே, அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன். உங்களுடைய விசாரணை எப்போது நிறைவடைகிறதோ, அப்போது நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.

கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை விடுவிக்க மறுப்பு
வெளிநாடு செல்வதற்காக, உச்சநீதிமன்றத்திடம் கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடி வைப்புத் தொகையை மேலும் 3 மாதங்களுக்கு விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு ஆகிய வழக்குகளை எதிர்கொண்டு வரும் கார்த்தி சிதம்பரம், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது. அதன்படி, உச்சநீதிமன்ற பதிவாளரிடம் அவர் வைப்புத் தொகையை செலுத்தினார். 
இதனிடையே, வைப்புத் தொகையை திருப்பி ஒப்படைக்கக் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. ரூ.10 கோடி தொகையை, கடன் வாங்கியே தாம் செலுத்தியிருந்ததாகவும், அந்த தொகைக்கான வட்டியை செலுத்தி வருவதாகவும் அவர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில், ரூ.10 கோடியை திருப்பி ஒப்படைக்கக் கோரி, அவர் புதிதாக தாக்கல் செய்த மனு மீது நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த தொகையை மேலும் 3 மாதங்களுக்கு விடுவிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார். விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், அவர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். கடந்த 6 மாதங்களில், 51 நாள்கள் அவர் வெளிநாடுகளில் இருந்துள்ளார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com