ஹரியாணாவில் ரூ. 2000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதையடுத்து, பாஜகவின் விஜய் சங்கல்ப் பேரணியில் பங்கேற்றுப் பேசிய அவர்,
"பெண்கள் உயர்கல்வியைப் பெறுவதற்காக நூ, சிர்சா மற்றும் பல்வால் ஆகிய மாவட்டங்களில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இது உட்பட ரூ. 2000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மத்திய அரசின் உதவியோடு ரூ. 2500 கோடி மதிப்பிலான மிகப் பெரிய திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெண் குழந்தையைப் பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அப்பாற்பட்டு, பாஜக அரசு (ஹரியாணா மாநில அரசு) பெண்களின் கல்வியில் கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. மனோகர் (ஹரியாணா முதல்வர்) மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்துகள்.
தங்களது தீபாவளியை புதிய வீட்டில் கொண்டாடவுள்ள மக்களுக்கு (வீட்டு வசதித் திட்டம் மூலம் பலனடையும் மக்கள்) எனது வாழ்த்துகள்" என்றார்.