புது தில்லி: வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், ஓசோர் ஆலையில் 1,2 பிரிவுகளில் 5 நாட்களும், ஆல்வார் மற்றும் பாந்த்ரா ஆலைகளில் 10 நாட்களும், பாண்டாநகர் ஆலையில் 18 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அசோக் லேலண்ட் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்த்தக வாகன விற்பனையும் 4,228-என்ற அளவிலிருந்து 8 சதவீதம் குறைந்து 3,882 ஆனது என அறிக்கையில் அசோக் லேலண்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.