கர்நாடகாவில் கொடூரம்: மகன் பப்ஜி விளையாட தடைப் போட்ட தந்தைக்கு நேர்ந்த கதி?!
மகன் பப்ஜி விளையாட தடைப் போட்ட தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது மகன் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் விவசாயி ஷங்கர் தேவப்ப கும்பர் (61),
உறங்காமல் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த மகனிடம் இருந்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் ரகுவீர் கும்பர் (21), தனது தந்தையின் தலையை வெட்டிப் படுகொலை செய்தார்.
பாலிடெக்னிக் மாணவரான ரகுவீர் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போன் கேம்களில் அடிமையாகியிருந்ததாகவும், தேர்வுகளில் தோல்வி அடைந்ததால், அதிருப்தியில் இருந்த பெற்றோர், செல்போனை பறித்ததால் ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள்.
முன்னதாக பப்ஜி விளையாட பணம் தர மறுத்ததால் ஷங்கர் மீது ஏற்கனவே ரகுவீர் கோபத்தில் இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு பக்கத்து வீட்டு ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியதால் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ரகுவீரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில்தான், ரகுவீரிடம் இருந்து செல்போனை பறித்த தந்தையின் தலையை வெட்டிக் கொன்ற மகன், தனது காலையும் வெட்டிக் கொண்டுள்ளார்.
உடனடியாக தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், ரகுவீரை கைது செய்த போது, இன்னும் எனது உடலை நான் வெட்டிக் கொள்ளுவதை முடிக்கவில்லை. கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி ரகுவீர் கூறியுள்ளது, அவர் எந்த அளவுக்கு செல்போன் கேம்களில் அடிமையாகியிருந்தார் என்பதை காட்டுவதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.