புது தில்லி: தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் திங்களன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
எனவே பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் மூலமாக இந்தியாவில் தாக்குதல்களைத் திட்டமிடலாம் என்று உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக அசம்பாவிதங்களைத் தடுக்க உள்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
சமீபத்தில் கூட குஜராத்தின் சர் கிரீக் பகுதியில் ஆளில்லாத படகுகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. எனவே அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.