நாடு முழுவதும் 2,480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கௌட் கூறுகையில்,
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்குகள் மற்றும் அதனால் வங்கிகளில் ஏற்பட்ட இழப்பு அல்லது ஊழல் தொகையின் அளவு உள்ளிட்டவை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பியிருந்தேன்.
இதுதொடர்பாக ஆர்பிஐ அளித்த பதிலில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 18 பொதுத்துறை வங்கிகளில் இருந்து 2,480 வங்கி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.31,898.63 கோடி இதனால் இழப்பு அல்லது ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 1,197 வழக்குகளும், அலகாபாத் வங்கியில் 381 வழக்குகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 99 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனால், இவ்வங்கிகளில் மட்டும் இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தங்களிடம் போதிய தகவல் இல்லை என ஆர்பிஐ தெரிவித்துவிட்டதாக கூறினார்.