
இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனத்தின் வணிக ஏகபோகம் குறித்தும் இணையவெளி விளம்பரச் சந்தையில் அந்த நிறுவனத்தின் ஆதிக்கம் குறித்தும் விசாரிக்கப் போவதாக அமெரிக்காவின் 50 மாகாணங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக இந்த மாகாணங்களின் அரசு வழக்குரைஞர்கள், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூகுளின் சில நடவடிக்கைகள் காரணமாக இணையதள வசதி தற்போது இலவசமாகக் கிடைப்பதில்லை என்று குறைகூறினர்.
கொலம்பியா மாவட்ட அரசு வழக்குரைஞர் கார்ல் ரசீன் கூறுகையில், கூகுள் நிறுவனத்தின் வணிக ஏகபோக அணுகுமுறை குறித்த புலன்விசாரணையை 50 மாகாணங்களைச் சேர்ந்த அரசு வழக்குரைஞர்கள் தொடங்கியுள்ளனர் என்றார்.
இது குறித்து டெக்சாஸ் மாகாண அரசு வழக்குரைஞர் கென் பாக்ஸ்டன் கூறுகையில், கூகுள் நிறுவனமானது எல்லா வகையான விளம்பரங்களிலும், இணையதளத் தேடல்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் வாங்குபவர்கள், விற்பவர்கள், ஏலம், யூடியூப் விடியோ போன்ற அனைத்து தரப்பின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான நுகர்வோர்கள் இணையதளம் என்பது இலவசமானது என்று நம்புகின்றனர். ஆனால் கூகுள் நிறுவனத்தின் வருமானம் 11,700 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.4 லட்சம் கோடி) என்பதில் இருந்து இணையதளம் இலவசமாகக் கிடைப்பதில்லை என்று நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது என்றார்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உலக விவகாரங்களுக்கான துணைத் தலைவர் கென்ட் வாக்கர் கூறியதாவது:
எங்கள் நிறுவனச் சேவைகள் பல்வேறு வாய்ப்புகளைத் தேர்வு செய்ய மக்களுக்கு உதவுகின்றன. அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் சிறு வணிகங்களுக்கு கூகுள் ஆதரவாக உள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பாக அதிகமாக செலவழிக்கும் அமெரிக்க நிறுவனங்களில் கூகுளும் ஒன்றாகும்.
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் முதலீடுகளை அது மேற்கொள்கிறது. அதன் பயனாக, சில ஆண்டுகளுக்கு முன் அறிவியல் கதைகளில் கற்பனையாக இருந்த விஷயங்கள் தற்போது நிஜமாகி, இலவசமாகவே கிடைக்கின்றன.
அதற்கு உதாரணமாக, எந்த மொழியில் இருந்தும் உடனடியாக மொழிபெயர்ப்பு செய்தல், உங்களுக்கு ஏற்படும் எந்தக் கேள்விக்கும் சுலபமாக விடை கண்டறிந்து கூறுவதை ஆகிய சேவைகளைக் குறிப்பிடலாம் என்றார் அவர்.