விவேகானந்தர் எழுச்சியுரையாற்றிய அதேநாளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.
உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் கால்நடை நோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு, கால்நடை வளர்ப்பு, நெகிழி மறுசுழற்சிப் பயன்பாடு, சாலைத் திட்டம், சுற்றுலா உள்ளிட்ட 16 நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை துவக்கி வைத்தார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கால்நடைப் பராமரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். மேலும் நெகிழியை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் கலந்துரையாடினார். அதுமட்டுமல்லாமல் அவர்களுடன் இணைந்து நெகிழி பிரிப்புப் பணியிலும் சிறிது நேரம் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் மற்றும் மதுரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி ஆகியோர் உடனிருந்தார். முன்னதாக ராணுவ ஹெலிகாப்டரில் உத்தரப்பிரதேசம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு அம்மாநில அரசு சார்ப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான் ஏற்கனவே கூறியது போன்று வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்துடன் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் நெகிழிப் பயன்பாட்டை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என தனிநபர் முதல் பொது அமைப்புகள் வரை அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறேன்.
கடந்த நூற்றாண்டில் இதே நாளில் (செப். 11) அமெரிக்காவிலுள்ள சிகாகோ நாட்டில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சியுரையாற்றினார்.
ஆனால், அதே நாளில் அதே அமெரிக்காவில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற இந்த உலகையே துயரத்தில் ஆழ்த்தியது. பயங்கரவாதம் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.