புது தில்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் வைகோ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு மதிமுக சார்பில் செப்டம்பர் மாதம் 15ம் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். எனவே அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வைகோ தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.