நாட்டின் பொருளாதார நிலை குறித்து ப.சிதம்பரம் கவலை: சுட்டுரையில் குடும்பத்தினர் மூலம் பதிவு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், நாட்டின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது குடும்பத்தினர் மூலமாக தனது சுட்டுரைக் கணக்கில் புதன்கிழமை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
எனது சார்பில் சுட்டுரைக் கணக்கில் பதிவிடுமாறு எனது குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன். உங்கள் (மக்கள்) அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. நீதிக்கும், அநீதிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஏழை மக்கள் அடையாளம் கண்டுகொண்டதை அறிந்து நான் வியக்கிறேன். கடந்த சில நாள்களாக நான் சந்தித்தவர்களையும், அவர்களிடம் பேசியதையும் அடிப்படையாக வைத்து இதைக் கூறுகிறேன்.
நம் நாட்டுப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழைகள் தான். வேலைவாய்ப்பு, வர்த்தகம், முதலீடுகள் ஆகியவை குறைந்துவிட்டன.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய இக்கட்டான நிலையிலிருந்து நாட்டையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுப்பதற்காக அரசு வைத்துள்ள திட்டம்தான் என்ன? என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தனக்குப் பதிலாக தனது சுட்டுரைக் கணக்கில் பதிவிடுமாறு சிதம்பரம் தனது குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை கூறியுள்ளார்.
அதேபோல், தாம் நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்துக்கு ஒப்புதல் வழங்கிய அதிகாரிகள் எவரையும் கைது செய்ய வேண்டாம் எனவும், அவர்கள் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்றும் சிபிஐ அதிகாரிகளிடம் சிதம்பரம் கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தொடுத்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம், 15 நாள்கள் சிபிஐ காவலில் இருந்தார். தற்போது கடந்த 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.