ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் லஷ்கர் ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியில் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி தப்பித்து ஓட முயற்சித்தார். காவல் துறையினர் அவரை நெருங்க முயற்சித்தபோது, கையெறி குண்டை வீசித் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து அந்தப் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். உயிரிழந்த பயங்கரவாதி, லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஆஸிஃப் மெக்பூல் பட் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதத்தை தூண்டியுள்ளார். வழக்கமான பணிகளைத் தொடரக்கூடாது என்றும், கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலமாக மக்களை அச்சுறுத்தினார். அண்மையில் சோபோரில் உள்ள பழக்கடைக்காரரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் இவருக்கு தொடர்புள்ளது. மேலும் பல பயங்கரவாதச் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று கூறினார்.
போலீஸார் இருவர் காயம்: பயங்கரவாதியை நெருங்க முயற்சித்தபோது, பயங்கரவாதி நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 2 போலீஸார் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.