தில்லியில் மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்க வாகனப் பயன்பாட்டு முறையை அமல்படுத்தப்போவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
புதிய வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் தான் தில்லியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைந்துள்ளது. ஒருவேளை இந்த விதியால் மக்கள் அதிக இடர்பாடுகளுக்கு ஆளானால், அபராதத் தொகையை அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நிர்ணயித்துக்கொள்ளும் அதிகாரம் கிடைக்கப்பெற்றவுடன் அவற்றில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
குளிர்காலம் நெருங்கி வரும் வேளையில் காற்று மாசு மற்றும் புகைமூட்டத்தைக் குறைக்கும் வகையில் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்க வாகனப் பயன்பாட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.
இதனால் தீபாவளியன்று ஏற்படும் மாசு குறையும். அதுபோன்று தீபாவளி பட்டாசு விற்பனை மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் உச்ச நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளை தில்லி அரசு திட்டவட்டமாக செயல்படுத்தும்.
மின்சாரப் பேருந்துகளை வாங்க தனியார் துறை முதலீடுகளை அரசு கோரியுள்ளது. அதன்மூலம் ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் அனைவரும் மரங்களை நட முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.