ஜார்க்கண்ட் மாநிலம், கார்வா மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து 8 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.4 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கார்வா மாவட்டத்தின் பஸ்ஸி கிராமத்தில் வியாழக்கிழமை நண்பகலில் கனமழை பெய்தது. அதனால், சாலையில் சென்று கொண்டிருந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கியிருந்தனர். அப்போது, அந்த மரத்தில் மின்னல் பாய்ந்தது.
அந்த சம்பவத்தில் மரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கியிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் 7 பேர் 18-30 வயதுக்குள்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
முதல்வர் இரங்கல்: மின்னல் பாய்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாநில முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்துள்ளார்.
இழப்பீடு: மின்னல் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக கார்வா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.