ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். 7 நாள் அரசுமுறைப் பயணமாக செல்லும் அவர், நியூயார்க் நகரில் பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசவுள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி, வரும் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் இருப்பார். 27-ஆம் தேதி காலை, ஐ.நா. பொதுச் சபையில் அவர் உரையாற்றவுள்ளார். மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபையில் முதல் முறையாக உரையாற்றவுள்ளார். மோடி உரையாற்றும் அதே நாளில், அவரது உரையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகிறார்.
இந்தப் பயணத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐ.நா. தலைமையகத்தில் உள்ள பொருளாதார, சமூக கவுன்சில் அரங்கில் தலைமைப் பண்பு விவகாரங்கள்: சமகால உலகுக்கும் தேவையானவர் காந்தி என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதுதவிர, ஹூஸ்டனில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கவுள்ளார் என்றார் ரவீஷ் குமார்.