நாட்டுக்கு தேவையானது இளைஞர்களை குறித்த முட்டாள்தனமாக கோட்பாடு அல்ல; பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்கும் உறுதியான திட்டம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. பொருளாதார சரிவுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சியினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்தற்கு, இக்கால இளைஞர்கள் சொந்தமாக கார்களை வாங்காமல் ஓலா, உபெர் உள்ளிட்ட வாடகைக் கார்களை பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
அதையடுத்து ராகுல் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொருளாதார சரிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசை குற்றம்சாட்டி ராகுல் காந்தி சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இப்போதைய சூழலில் நம் நாட்டுக்கு தேவையானது பிரசாரமோ, போலியான செய்திகளோ, இக்கால இளைஞர்கள் குறித்த முட்டாள்தனமான கோட்பாடுகளோ இல்லை. சரிவில் இருக்கும் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கு உறுதியான திட்டம்தான் தேவை. ஆனால் இந்தத் திட்டத்தை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.