விநாயகர் சதுர்த்தியையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பிள்ளையார் சதுர்த்தியையொட்டி, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. பிள்ளையார் சதுர்த்தி விழா நடைபெற்ற 10-ஆவது நாளான வியாழக்கிழமை அந்தப் பிள்ளையார் சிலைகள் மாநிலத்தின் பல்வேறு நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பிள்ளையாரைத் துதிக்கும் கோஷங்களை எழுப்பியவாறு, நீர் நிலைகளில் சிலைகளை பக்தர்கள் விசர்ஜனம் செய்தனர்.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலையை தனது இல்லத்தில் வைத்திருந்தார். அதை விசர்ஜனம் செய்ய எடுத்துச் செல்வதற்கு முன்பு அவர் பூஜை செய்தார்.
நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்ற வழிகளில் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கில் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தாணே, நவி மும்பை, பல்கார், சோலாப்பூர், கோலாப்பூர், ஒளரங்காபாத், நந்தேட், ஜல்கான், அமராவதி, நாகபுரி உள்ளிட்ட நகரங்களில் பிரம்மாண்ட பிள்ளையார் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.
பிற மாநிலங்களில்...
உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள் வியாழக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.