புது தில்லி: நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று கூறிய மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார சூழல் குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதையேக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகள்..
அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு உள்ளது.
வரி செலுத்தும் முறையில் சிறிய தவறுகள் இருந்தால் அதற்காக தண்டிக்கப்பட மாட்டார்கள்.
ஜனவரி 1ம் தேதி முதல் ஏற்றுமதி வரியில் சுங்க வரி நீக்கப்படும்.
இந்த திட்டத்தால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் உட்பட பல துறையினர் பயன்பெறுவார்கள்.
துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் போல 2020ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
சிறு, குறு தொழில்களுக்கான ஏற்றுமதி ப்ரீமியம் மிகக் குறைவாக நிர்ணயிக்கப்படும்.
தொழில்துறையினருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 4 பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
வாராக்கடனை வசூலிக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.