ஹிந்தியை தேசிய மொழி என்று கூறிய கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மொழிகளுமே தேசிய மொழிதான் என்று டிவீட் செய்துள்ளார்.
ஹிந்தி தினம் அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, "ஹிந்தி மொழியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும், ஹிந்தி மொழி மூலம் சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும்" என்ற வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவீட் செய்திருந்தார். இதையடுத்து, இதுதொடர்பான நிகழ்விலும் இந்த கருத்தை ஒட்டியே அவர் பேசியிருந்தார்.
மேலும் படிக்க: ஹிந்தியால் நாட்டை ஒருங்கிணைக்க முடியும்: அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தின. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
மேலும் படிக்க: அமித் ஷா பேச்சு: தமிழக தலைவர்கள் கண்டனம்
அதேசமயம், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ஹிந்தி தினம் குறித்து டிவீட் செய்கையில், "ஒரு மொழி மக்களை ஈர்த்து, அவர்களை ஒருங்கிணைக்கும். நமது ஒற்றுமையை தேசிய மொழியான ஹிந்தி மூலம் மேலும் பலப்படுத்துவோம். நமது தாய் மொழியுடன், ஹிந்தியையும் பயன்படுத்துவோம். ஹிந்தி தினத்துக்கு எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று ஹிந்தி மொழியை தேசிய மொழி என்று குறிப்பிட்டிருந்த அவர், இன்று இந்தியாவின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிதான் என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவில்,
"உண்மைதான், ஹிந்தி மொழியை அரசியலமைப்புச் சட்டம் தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்திய மக்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ஹிந்தியை அலுவல் மொழியாக மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நமது அனைத்து மொழிகளும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
என்னைப் பொறுத்தவரை, இந்தியாவில் பேசும் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். காரணம், அவையனைத்தும் இந்திய மக்களால் பேசப்படுகிறது. மொழி என்பது ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு, பரஸ்பரம் பாராட்டுதலை வெளிப்படுத்துவதற்கு உதவும். ஒவ்வொரு மொழியும், பிரிவுகளை இணைப்பதற்கான பாலம் போன்ற ஒரு தளமாகும். அனைத்து மொழிகளும் ஒரே இலக்கை நோக்கிதான் வழிநடத்தும்.
8-ஆம் நூற்றாண்டின் ஒரு இலக்கியம், 'அனைத்து மொழிகளும் அன்னை சரஸ்வதியின் மொழியே. நம்மால் முடிந்த அளவுக்கு நிறைய மொழிகளைக் கற்று, அதனூடாக அதன் கலாசாரம் மற்றும் பண்பாடுகளை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்' என்று கூறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.