கோவையில் ரூ.1-க்கு இட்லி விற்று வரும் கமலா பாட்டியின் பணிக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கமலா பாட்டியின் ஒரு விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களையும் கூறியிருந்தார்.
அவருக்கு தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும், அவரைப்பற்றி தெரிந்தவர்கள் எனக்குத் தகவல் தெரிவிக்கவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரபரப்பட்டது. நெட்டிசன்கள் பலரும் அவரது சமூகப்பணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தகவலறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கமலா பாட்டியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் அவருக்கு புதிய வீடு கட்டித்தர ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ளும்படியும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, கமலா பாட்டிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழகத்தைச் சேர்ந்த கமலாத்தாள் மூதாட்டியின் பணிக்கு எனது வாழ்த்துக்கள். அவரது பணி அனைவரையும் ஊக்குவிப்பதாக உள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.