மத்திய அரசின் "ஆயுஷ்மான் பாரத்' எனும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களிடம் இருந்து புத்தாக்க யோசனைகளை மத்திய அரசு கோரியுள்ளது.
இதுதொடர்பாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்து பூஷண், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள "ஆயுஷ்மான் பாரத்' எனும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கருத்துகளும் புதிய யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
புதிய யோசனைகளை மத்திய அரசு வரும் அக்டோபர் 10-ஆம் தேதி முதல் பெறவுள்ளது. அன்றைய தினம், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வைத் தொடங்கி வைப்பார். சிறப்பான யோசனைகளை வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். அவர்களது யோசனைகளும் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 18, 000 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.