பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜகவினர் சேவை வாரம் கடைப்பிடித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார்.
வரும் 17-ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள். இந்த வாரம் முழுவதையும் "சேவை வாரமாக' கொண்டாட பாஜக முடிவெடுத்தது. அதன் ஒரு பகுதியாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அமித் ஷாவும், பாஜக நிர்வாகிகளும் சேவையாற்றினர். மருத்துவமனையின் தரையை அவர்கள் சுத்தம் செய்தனர். அங்குள்ள நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, பழங்கள் உள்ளிட்டவற்றை அமித் ஷா வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஏழை மக்களுக்கு சேவையாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர், பிரதமர் மோடி. அதனடிப்படையில், அவரது பிறந்த நாளை மக்களுக்கு சேவையாற்றும் நிகழ்வாகக் கொண்டாடுவதில் ஆச்சரியமேதுமில்லை. இந்த சேவை வாரத்தில், மரங்கள் நடுவது, தூய்மைப் பணியில் ஈடுபடுவது, நெகிழிப் பொருள்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளை பாஜக தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அமித் ஷா.
வரும் 20-ஆம் தேதி வரை இந்த சேவை வாரத்தை பாஜக கடைப்பிடிக்க உள்ளது.
கண்காட்சி: பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் அவரது சாதனைகளை விளக்கும் வகையிலான கண்காட்சியை அமித் ஷா சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இதில், பாலாகோட் தாக்குதல், "ஆயுஷ்மான் பாரத்' சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், தேசிய போர் நினைவுச் சின்னம், "மனதின் குரல்' நிகழ்ச்சி, "தூய்மை இந்தியா' திட்டம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், முத்தலாக் நடைமுறை ஒழிப்பு உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடியின் பங்களிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய படங்கள், பதாகைகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடியின் இள வயது வாழ்க்கை குறித்த விவரங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.