திருச்சானூரில் நடந்து வந்த வருடாந்திர பவித்ரோற்சவம் சனிக்கிழமை மகா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. அதன் நிறைவு நாளான சனிக்கிழமை காலை சுப்ரபாதத்துடன் தாயாரை எழுப்பி, சகஸ்ர நாமார்ச்சனை, அபிஷேகம் உள்ளிட்டவற்றை அர்ச்சகர்கள் நடத்தினர். அதன்பின், தாயார் முன் ஹோமம் வளர்த்தி மகா பூர்ணாஹுதி நடத்தப்பட்டது. பின்னர், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளக்கரை மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சன முடிவில் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அப்போது தேவஸ்தான அதிகாரிகள் புனித நீராடினர். இதில் கோயில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பத்மாவதி தாயார், சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீகிருஷ்ண சுவாமி உள்ளிட்டோர் தனித்தனியே மாடவீதியில் எழுந்தருளினர். பக்தர்கள் அவர்களுக்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். இதை முன்னிட்டு பிரேக் தரிசனம், லட்சுமிபூஜை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன.