புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார்.
புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை, அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழிசை சௌந்தரராஜன். இந்த சந்திப்பின் போது வெங்கய்ய நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவும் உடன் இருந்தார்.
தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.
ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் செளஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மத்திய இணையமைச்சர் கிஷண் ரெட்டி, ஹிமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தத்தாத்ரேயா, தெலங்கானா சட்டப் பேரவைத் தலைவர் போசாராம் ரெட்டி, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிரிக்கப்பட்ட பிறகு, ஆந்திரத்தின் ஆளுநராக இருந்த இ.எஸ்.எல். நரசிம்மன், இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக பதவி வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, தெலங்கானாவின் அடுத்த ஆளுநராக, தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்தரராஜனை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
மேலும் படிக்க: நாட்டின் இளவயது ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!
58 வயதாகும் தமிழிசை செளந்தரராஜன், 1999-ஆம் ஆண்டு பாஜகவின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளர், பாஜகவின் மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் என கட்சியின் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தார்.