பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை செவ்வாய்கிழமை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் எனறு காங்கிரஸ் தலைவர் சோனியா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொலைநோக்குப் பார்வைக் கொண்ட தலைவரால் நாடு பல உச்சங்களைத் தொட்டு வருகிறது. அவருக்கு ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்தியுள்ளார்.
சிறந்த தலைவர், மிகச்சிறந்த தேசப் பற்றாளர், அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்துவரும், பிரதமர் மோடிக்கு 130 மக்களுடன் இணைந்து தானும் வாழ்த்து தெரிவிப்பதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சிறிய கிராமங்கள் முதல் உலக நகரங்கள் வரை, அடிப்படை உறுப்பினர் முதல் மிகப்பெரிய தேசத் தலைவர் வரை, கட்சி ஒருங்கிணைப்பாளர் முதல் சிறந்த நிர்வாகி வரை, பூத் ஏஜெண்ட் முதல் உலகின் பிரசித்தி பெற்ற தலைவர் வரை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடிய, தொலைநோக்குப் பார்வை கொண்ட பெரும் தலைவரான பிரதமர் மோடி நீடூழி வாழ வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் உலகளவில் நாட்டின் மரியாதை உயர்ந்துள்ளது. இதேபோன்று என்றும் நமது நாடு உயர்வை அடைந்துகொண்டு இருக்க, உங்கள் கனவுகள் மெய்ப்பட உலகத் தலைவரான பிரதமருக்கு வாழ்த்துகள் என்று பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளார்.