மும்பை: சாவர்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்தியப் பிரிவினையே நடந்திருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
ஹிந்து மகாசபையின் தலைவராகவும் இந்தியாவை ஒரு ஹிந்து நாடாக உருவாக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்திலும் இருந்தவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். அவர்தான் 'ஹிந்துத்துவா' என்ற கருத்தாக்கத்தை பிரபலப்படுத்தியவர் ஆவார். அவரை "வீர சாவர்க்கர்" என்று அழைத்தனர்.
அவரைப் பற்றி விக்ரம் சம்பத் என்பவர் எழுதிய "சாவர்க்கர்: மறக்கப்பட்ட கடந்த காலத்தின் எதிரொலிகள்" என்ற புத்தகத்தின் வெளியீடு செவ்வாயன்று மும்பையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:
தேசத்தின் வளர்ச்சிக்கான காந்தி மற்றும் நேருவின் பணிகளை எவ்வாறு மறைக்கஇயலாதோ, அதேபோல் இந்த நாட்டின் அரசியல் சித்திரம் என்பது இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் உரியது அல்ல. சாவர்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்தியப் பிரிவினையே நடந்திருக்காது.
நேரு சிறை வாழ்வை 14 நிமிடங்கள் தாக்குப்பிடித்திருப்பாரேயானால் நான் அவரையும் "வீரர்" என்று அழைத்திருப்பேன்; ஆனால் சாவார்க்கர் 14 வருடங்களை சிறையில் கழித்துள்ளார். தற்போது ஒரு ஹிந்துத்துவ அரசு ஆட்சியில் இருப்பதால், அவருக்கு பாரத் ரத்னா அளித்து கவுரவிக்க வேண்டும்.
சாவார்க்கரை தொடர்ந்து விமர்சித்து வந்த ராகுல் காந்திக்கு இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியினை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.