சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கில், தில்லியிலுள்ள பண்ணை வீடு, பிகானீரிலுள்ள பழங்கால கோட்டை ஆகியவற்றை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். இவ்விரு சொத்துகளும், குரேஷியின் போலி நிறுவனங்களின் பெயரில் உள்ளன.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மொயின் குரேஷியால் உருவாக்கப்பட்ட போலி நிறுவனங்களின் பெயரில் தில்லியிலும், ராஜஸ்தான், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களிலும் அசையா சொத்துகள் உள்ளன. இதில், தில்லியின் சத்தர்பூர் பகுதியிலுள்ள பண்ணை வீடு, ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்திலுள்ள ஒரு பழங்கால கோட்டை ஆகியவை, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.