டி.கே.சிவகுமாருக்கு அக்.1 வரை நீதிமன்ற காவல்

கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும்,  காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை, அக்டோபர் 1-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி
டி.கே.சிவகுமாருக்கு அக்.1 வரை நீதிமன்ற காவல்


கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும்,  காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை, அக்டோபர் 1-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட டி.கே.சிவகுமார், அமலாக்கத் துறை காவல் முடிந்து, சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹர் முன் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். 
அவரை, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள டி.கே.சிவகுமாரை, முதலில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்பதை உறுதி செய்ய பிறகே, திகார் சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும். சிறையில் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு அவரை அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். .
வழக்கு விவரம்: ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிவகுமார் கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிவகுமாரிடம் ரூ.200 கோடி கருப்பு பணம் உள்ளதாகவும், ரூ.800 மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவரது மகள் ஐஸ்வர்யாவும் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com