லடாக்கில் பயிற்சியை நடத்தியது ராணுவம்: வடக்குப் பிராந்திய தளபதி திருப்தி

கிழக்கு லடாக்கின் அதி உயரப் பகுதியில் ராணுவம் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பயிற்சி நடத்தியதற்கு, ராணுவத்தின் வடக்குப் பிராந்திய தளபதி ரண்வீர் சிங் திருப்தி தெரிவித்துள்ளார்.


கிழக்கு லடாக்கின் அதி உயரப் பகுதியில் ராணுவம் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பயிற்சி நடத்தியதற்கு, ராணுவத்தின் வடக்குப் பிராந்திய தளபதி ரண்வீர் சிங் திருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
கிழக்கு லடாக்கில் நடைபெற்ற ஒருங்கிணைந்த கூட்டுப் படைகளின் போர்ப் பயிற்சியை ரண்வீர் சிங் நேரில் பார்வையிட்டார். இதில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ராணுவப் பயிற்சிகள் இடம்பெற்றன. ராணுவ வீரர்களின் பயிற்சி குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமான பகுதிகளில் போர் புரிய தயார் நிலையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ரண்வீர் சிங் பாராட்டு தெரிவித்தார். 
அண்டை நாடுகளுடன் போர் புரியும் சூழல் உருவானால், வடக்குப் பிராந்தியப் பிரிவு திறமையுடன் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ராணுவப் படைகள் அனைத்தையும் தயார்நிலையில் வைக்குமாறு உயரதிகாரிகளுக்கு ரண்வீர் சிங் வலியுறுத்தினார் என ராணுவ அதிகாரிகள் கூறினர்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: ஜம்மு-காஷ்மீரின் சம்பா, கதுவா மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கூறுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 1 மணியளவில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறிய ரக துப்பாக்கிகள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினரிடையேயான துப்பாக்கிச் சண்டை சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. இதில், இந்திய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com