ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றக் காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு, மருத்துவப் பரிசோதனை செய்யவும் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் அனுமதி அளித்துள்ளார்.
மேலும், சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவலை நீட்டிக்குமாறு சிபிஐ வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அக்டேபார் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
செப்டம்பர் 5ம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 73 வயதாகும் சிதம்பரத்துக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் இருப்பதாகவும், நீதிமன்றக் காவலில் வைத்தபிறகு அவரது உடல் எடை குறைந்திருப்பதாகவும், சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல் வாதிட்டார்.