ஆயுட்காலம் முடிவடைகிறது: விக்ரம் லேண்டரின் நிலை என்ன?

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் சனிக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், இதுவரை நாசாவிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
ஆயுட்காலம் முடிவடைகிறது: விக்ரம் லேண்டரின் நிலை என்ன?

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் சனிக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், அதனை நாசாவால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாகப் பிரித்து விடப்பட்டது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி செப்.7-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர். மிகவும் கடினமான பகுதிகளை எளிதாகத் தாண்டிய லேண்டர் விக்ரம் கடைசி சில நிமிடங்களில் நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவில் லேண்டர் வந்தபோது, அதற்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதன்பின்னர் லேண்டர் விக்ரம் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோவின் தலைவர் சிவன் தழுதழுத்த குரலில்கூறினார். பிரதமர் மோடி அவருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களும் மனதை நெகிழ வைத்தன. 

சந்திரயான் -2 திட்டத்தை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தான் இஸ்ரோவுக்கு ஆதரவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' களமிறங்கியது.

நாசா கடந்த 2009ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பிய ஆர்பிட்டர் ஒன்று நிலவைச் சுற்றி வருகிறது. அதன் உதவியுடன் லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்கலாம் என்று அதற்கான பணிகளில் நாசா ஈடுபட்டு வருகிறது.

லேண்டர் விக்ரம் நிலவில் ஒரு நாள்(பூமியில் 14 நாட்கள்) ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பணியைத் தொடங்கிய நாசா, ஆர்பிட்டரின் உதவியுடன் லேண்டர் விக்ரம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது.

லேண்டர் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைகிறது. ஆனால், இதுவரை லேண்டர் விக்ரம் இருக்கும் நிலை குறித்து எந்தத் தகவலையும் நாசா வெளியிடவில்லை. நிலவில் இருக்கும் சூழ்நிலை காரணமாக நாசாவின் ஆர்பிட்டர், லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com