அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான சந்திப்பு மற்றும் ஐ.நா. கூட்டம் தவிர கார்ப்ரேட் நிறுவனங்களின் சிஇஓ-க்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-வது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 28-ஆம் தேதி காலை உரையாற்றுகிறார்.
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்களுடன் செப்டம்பர் 22-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பங்கேற்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30 வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த அமெரிக்கப் பயணத்தின்போது டொனால்ட் டிரம்பைச் சந்திப்பது, ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றுவது தவிர, மற்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 21-ஆம் தேதி பிபி, எக்ஸன்மொபில், எமெர்சன் எலக்ட்ரிக் நிறுவனம், வின்மார் இன்டர்நேஷனல் மற்றும் ஐஹெச்எஸ் மார்கிட் போன்ற 12 தொழில் நிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் சிலரைச் சந்தித்து, இந்தியாவில் தொழில் செய்ய பிரதமர் மோடி ஊக்குவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.