உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இவர்களது பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 31-இல் இருந்து 34-ஆக உயர்த்தி, மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.
தற்போது தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் பணியில் உள்ளனர். புதிய நீதிபதிகளின் நியமனம் மூலம் இந்த எண்ணிக்கை 34-ஆக உயர்ந்திருக்கிறது.