புது தில்லி: கார்பப்ரேட் வரியைக் குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ எனப்படும் சென்செக்ஸ் இன்று காலை 1,838.92 என்ற அளவில் வர்த்தகமானது.
உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, உள்நாட்டில் செயல்படும் எந்தவொரு நிறுவனமும் 22 சதவீதம் என்ற அடிப்படையில் வருமான வரி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கார்ப்பரேட் வரி 25.17% ஆக இருந்தது.
அதேப்போல, புதிதாக தொடங்கும் நிறுவனங்கள் 17.1% கார்ப்பரேட் வரி செலுத்தவும் புதிய அறிவிப்பினை வெளியிட்டார். நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் கோடி அளவுக்க வரி செலுத்துவதில் இருந்து நிறுவனங்கள் தப்பித்துள்ளன.
இதன் மூலம் முதலீடு செய்வதும், வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சென்செக்ஸ் 1,838.92 புள்ளிகளிலும், நிப்டி 519 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்ஆண்ட்எம், எச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம்அடைந்தன.
நிர்மலா சீதாராமனின் அறிவிப்பினைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் உயர்ந்து ரூ.70.68 ஆக இருந்தது.