அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 முதல் 29-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, ஐ.நா. பொதுச் சபையில் மோடி உரையாற்றவுள்ளார்.
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டு கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24- ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் வரும் 27-ஆம் தேதி காலை மோடி உரையாற்றவுள்ளார். ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் வரும் 22-ஆம் தேதி நடத்தும் மோடி நலமா? நிகழ்ச்சியில் மோடி உரையாற்றவுள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே கூறியதாவது:
அமெரிக்காவுக்கு வரும் 21-ஆம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். இந்தப் பயணத்தின்போது, முதலில் ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் இடையே, இருநாடுகளுக்கிடையேயுள்ள உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து வரும் 24-ஆம் தேதி நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை மோடி நடத்துகிறார். இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் வரும் 27-ஆம் தேதி காலை உரையாற்றும் மோடி,அன்றைக்கு மதியம் அங்கிருந்து புறப்படுகிறார் என்று கூறினார்.