கேரளத்தில் மாநில போலீஸாருக்கு பணியில் ஏற்படும் மனஅழுத்தத்தைப் போக்குவதற்காக புதிய திட்டத்தை அந்த மாநில காவல் துறை அறிவித்துள்ளது.
பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வது, மூத்த காவல் துறை அதிகாரிகள், காவல் பணியில் புதிதாக இணைந்தவர்களை துன்புறுத்துவது, போலீஸார் தற்கொலை உள்ளிட்ட காரணங்களுக்காக கேரள காவல் துறை அண்மையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை மாநில காவல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறை டிஜிபி லோக்நாத் பெஹரா மாவட்ட காவல் துறைக்கு அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில போலீஸார் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பொதுமக்களின் நண்பர்களாக போலீஸார் இருக்க வேண்டும். பணியில் ஏற்படும் மனஅழுத்தத்தால், பல காவலர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இந்தப் பிரச்னையை போக்குவதற்காக, காவல் துறையில் மனநல ஆலோசகர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைமை காவல் நிலையத்திலும் இந்த ஆலோசகர்கள் குழு அமைக்கப்படும். அடுத்த மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
காவலர் ஒருவர் மனஅழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் ஆலோசகர்களிடம் சென்று ஆலோசனை பெறலாம். மனஅழுத்தத்தில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை ஆலோசகர்களிடம் உயரதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆலோசனைக்கு செல்லும் நாள்கள், பணியில் இருந்ததாக கணக்கில் கொள்ளப்படும். அதற்கான ஊதிய சலுகைகளும் வழங்கப்படும்.
யோகாசனம், தியானம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இளநிலை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை ஊக்குவிப்பதற்காக, இந்தத் திட்டத்தில் மூத்த உயரதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தவறான வார்த்தைகளை பயன்படுத்தும் காவலர்களைக் கண்டறிந்து அவர்களை பணியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.