பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்.26 மற்றும் 27 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கித் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக, பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அறிவித்தார். மத்திய அரசின் இந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.
பொதுத்துறை வங்கிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் முயற்சியாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதற்கு வங்கி அதிகாரிகள் சங்கம் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27ம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி அலுவலர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம், இந்திய தேசிய வங்கி அலுவலர் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளை இணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 26 (வியாழன்) மற்றும் 27ம் (வெள்ளி) தேதிகளில்,வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதி முறையே 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நாட்களில் வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் மற்றும் ஏடிஎம்களில் பணப்பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலை உருவாகும்.
மேலும், அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு வருகிற அக்டோபர் 22ம் தேதி வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு செவி சாய்க்காத பட்சத்தில் நவம்பர் மாதத்தில் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று வங்கி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.