கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார், அமலாக்கத் துறையிடம் தான் அளித்த வாக்குமூலத்தின் நகலைக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள கர்நாடக அரசு இல்ல ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த 3-ஆம் தேதி சிவகுமார் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறையிடம் தான் அளித்த வாக்குமூலத்தின் நகலை வழங்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் டி.கே. சிவகுமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரஜேஷ் சேதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவகுமார் தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்துக்கு வர இயலாததால், வழக்கை ஒத்திவைக்குமாறு அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், ஜாமீன் கோரி சிவகுமார் தாக்கல் செய்த மனு சனிக்கிழமை (செப்டம்பர் 21) விசாரிக்கப்பட உள்ளது.
சிவகுமாரிடம் ரூ. 200 கோடி கருப்பு பணம் உள்ளதாகவும், ரூ. 800 மதிப்பிலான பினாமி சொத்துகள் உள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் அவரது மகள் ஐஸ்வர்யாவும் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் சிவகுமார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.