இந்தியாவின் தேசிய தலைமையை குறைந்து மதிப்பிடுவதே பாகிஸ்தானின் வாடிக்கையாக உள்ளது. பாலாகோட் வான்வழித் தாக்குதலிலும் இதேபோன்றுதான் பாகிஸ்தான் நடந்து கொண்டது என்று இந்திய விமானப் படைத் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ளநிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
இந்திய தேசிய தலைமையை பாகிஸ்தான் எப்போதுமே குறைத்து மதிப்பீடு செய்யும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது லால் பகதூர் சாஸ்திரியையும் அவர்கள் அப்படித்தான் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் லாகூர் வரையில் படைகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோன்று கார்கில் போரின்போதும் இதே நிலைமைதான். நமது படைகள் காஷ்மீரில் மட்டுமே போரிடும் என்பது அவர்களின் நினைப்பாக இருந்தது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் நமது படைகள் ஃபோபர்ஸ் பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் படைகளை நிலைகுலையச் செய்து விரட்டியடித்தது.
இப்போது கூட, புல்வாமாவில் பயங்கரவாதிகளை ஏவி தாக்குதல் நடத்தி நமது வீரர்களை கொன்று குவித்த விவகாரத்தில் பாகிஸ்தான் தப்பு கணக்கு போட்டுவிட்டது. இந்திய அரசியல் தலைமை பாலகோட் போன்றதொரு தாக்குதலை நடத்த ஒப்புக் கொள்ளாது என்பதே அவர்களின் கணிப்பாக இருந்தது. இதற்கு நமது விமானப் படைக்கு திறன் இல்லை என்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. நமது படைகளின் வலிமை அவர்களுக்கு (பாகிஸ்தான்) தெரியும். ஆனாலும், நமது தேசிய தலைமை இதுபோன்று தாக்குதல் நடத்துவதற்கு அனுமதிக்காது என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது என்றார் அவர்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் நமது விமானப் படை, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது நினைவு கூரத்தக்கது.