ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில் வயலில் இருந்த மோட்டாரை திருடியதாக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
மெவாகெடா கிராமத்தைச் சேர்ந்த துலிசந்த் மீனா என்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் தங்கள் வயலில் வைத்திருந்த மோட்டாரை திருடி விட்டதாக புரிலால் தன்வாரும் (60), அவரது மகன்களும் குற்றம்சாட்டினர். அப்போது, துலிசந்துக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.
இதில் துலிசந்தை தன்வாரும், அவரது மகன்களும் சரமாரியாக அடித்து உதைத்தனர். துலிசந்தை அவரது தந்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
எனினும், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.