உ.பி.யில் பலத்த மழைக்கு 18 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் கடந்த இரு நாள்களில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த சனிக்கிழமை 13 பேரும், ஞாயிற்றுக்கிழமை 5 பேரும் உயிரிழந்ததாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெருக்கெடுத்து ஓடும் கங்கை நதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நகரின் சோட்டா போகரா பகுதி. நாள்: ஞாயிற்றுக்கிழமை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெருக்கெடுத்து ஓடும் கங்கை நதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பிரயாக்ராஜ் (அலாகாபாத்) நகரின் சோட்டா போகரா பகுதி. நாள்: ஞாயிற்றுக்கிழமை.

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் கடந்த இரு நாள்களில் 18 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த சனிக்கிழமை 13 பேரும், ஞாயிற்றுக்கிழமை 5 பேரும் உயிரிழந்ததாக அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

கௌஷாம்பி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கி 3 பேரும், அமேதியில் கனமழையால் சுவர் இடிந்து ஒருவரும், பண்டா பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும் உயிரிழந்தனர். சோன்பத்ராவில் சனிக்கிழமை மின்னல் தாக்கி 3 பேர், பலியாவில் வெள்ள நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். படோஹி, ஜான்பூர் பகுதிகளில் மின்னல் தாக்கியும் கௌஷாம்பி, பிலிபித், கோரக்பூர் ஆகிய இடங்களில் பாம்பு கடித்தும் 7 உயிரிழப்புகள் நேரிட்டன.

தொடர் மழையால், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரயாக்ராஜில் கட்டடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மாநிலத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் திங்கள்கிழமையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்றார் அந்த அதிகாரி.

மேற்கு வங்கம், ஜார்க்கண்டில் 6 பேர் பலி: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். அவர்கள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலோக் ரஜோரியா தெரிவித்தார்.

ஜார்க்கண்டின் சாத்ரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், "மத்வா கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட 7 பேர், ஞாயிற்றுக்கிழமை கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தனர். கனமழை பெய்ததால், ஒரு மரத்தின்கீழ் அவர்கள் ஒதுங்கி நின்றபோது, மின்னல் தாக்கியது. இதில் ஒரு இளைஞரும், 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள், சதர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்று தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விதிமுறைகளின்படி உரிய நிதியுதவி உதவி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com