ஜம்மு-காஷ்மீர் அரசியல்வாதிகள் 18 மாதங்களுக்கு மேல் காவலில் வைக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படவில்லை. அவர்கள் விஐபி பங்களாக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கான சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு விருப்பமான உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நாங்கள் ஹாலிவுட் படங்களின் குறுந்தகடுகளைக் கூட அளிக்கிறோம்.
அரசியல்வாதிகள் யாரும் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர்கள் வீட்டு விருந்தினர்களைப் போல் நடத்தப்படுகின்றனர். 18 மாதங்களுக்கு மேல் அவர்கள் காவலில் வைக்கப்பட மாட்டார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. ஜம்மு-காஷ்மீரின் எல்லைகளை மீட்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றம் கடந்த 1999-இல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் என்று பலரும் ஜம்மு-காஷ்மீர் அரசால் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் மூன்று முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப் தி ஆகியோரும் அடங்குவர்.