மருத்துவ உலகில் மகத்தான சாதனை: 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை!

5 கிலோக்கும் குறைவான உடல் எடையுடன் இருந்த 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மும்பையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவ உலகில் மகத்தான சாதனை: 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை!


மும்பை: 5 கிலோக்கும் குறைவான உடல் எடையுடன் இருந்த 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மும்பையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த உயிர் காக்கும் அறுவை சிகிச்சை கடந்த ஜூன் மாதம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தை பூரண குணம் அடைந்து உடல் நலம் தேறி வரும் நிலையில், அதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சூரத்தைச் சேர்ந்த சுசித்ரா - க்ருனல் வால்வியின் செல்ல மகள் இப்ஸா. குழந்தை பிறக்கும் போதே மஞ்சள் காமாலையுடன் பிறந்தது. வழக்கமான சிகிச்சைகளால் மஞ்சள் காமாலை குணம் அடையாததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு பிலியரி அட்ரெஸியா எனப்படும் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். அதாவது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை. இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை மோசமாகிவிடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

5 மாதக் குழந்தையாக இருக்கும் போது இந்த நோய் கண்டறியப்பட்டதால் கல்லீரல் மாற்று மட்டுமே ஒரே தீர்வு என்று குளோபல் மருத்துவமனை மருத்துவர் அனுராக் ஷ்ரிமால் தெரிவித்தார்.

சுசித்ராவின் தங்கை க்ருபாலியின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து இப்ஸாவுக்கு பொறுத்தியுள்ளனர். பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய இப்ஸாவுக்கு மஞ்சள் காமாலையும் குணமடைந்து வருவதாகவும், தற்போது அவர் நன்கு விளையாடி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இப்ஸாவின் தாய் சுசித்ரா தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.16 லட்சம் செலவானதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com