ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தது. பின்னர், சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், அக்.3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், தில்லியில் உள்ள திகார் சிறையில் ப.சிதம்பரம் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் எனது தந்தையை திகார் சிறையில் சந்தித்துப் பேசினர். இந்த அரசியல் யுத்தத்தில் அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது வரவேற்கத்தக்கது. இது எங்களுக்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது.
எனது தந்தை ப.சிதம்பரம் மற்றும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு என்றும் நன்றியுடன் இருப்போம் என்று தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.